எழுத்தாளர் அறிமுகப்படலம்
சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் ஃபாத்திமா ஷஃபானா அவர்களைப் பற்றிய நேர்காணல் இதோ :
பெயர் : ஃபாத்திமா ஷஃபானா
புனைபெயர்: பா. ஷபானா
ஊர் : மாவனல்லை (ஸ்ரீலங்கா)
படிப்பு : பாடசாலை கல்வி மட்டும் தான்
தளம் : www.narumugainovels.com
தற்சமயம் எழுதி கொண்டிருக்கும் லிங்:
உங்களுடைய புத்தகத்தின் பெயர் மற்றும் கிடைக்கும் முகவரி :
உன் உறவாகிறேன் என் உணர்வாகிடு
அருண் பதிப்பகம்
+91 90031 45749
அல்லது
Wecanshopping.com
இலங்கையில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை.
******
உங்களுடைய முதல் கதையின் பெயர்:
காதலின் இன்மை உணர்கிறேன். இன்று வரை தளத்தில் இருக்கிறது.
******
மொத்தம் எத்தனை எழுதியிருக்கீங்க :
குறுநாவல் ஒன்று,
நேரடிப் புத்தகம் ஒன்று மற்றும்
இப்போது தளத்தில் பதிவிடுவது
******
உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா :
அப்பா, அம்மா நான் ஒரு தம்பி இதான் என் தாய் வீடு.
அப்பா ஓய்வு பெற்ற அதிபர்/ மௌலவி (மத குரு).
எனது கணவர் ஒரு வியாபாரி, ஒரு மகன், ஒரு மகள். இருவரும் படிக்கிறார்கள்.
சின்ன வயது முதல் வாசிப்பில் அதிக ஆர்வம். மளிகை சாமான்கள் சுற்றி வரும் தாள் துண்டில் இருக்கும் துணுக்குகளைக் கூட வாசிக்கும் ரகம். நான் வளர வளர என் வாசிப்பும் வளர்ந்து என்னை வளர்த்து விட்டது.
*****
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா :
பாடல் வரிகளுக்கு பதில் வரி போல் எழுதி அது மெல்ல மெல்ல கவிதைகளானது. ஒரு சொல் ஒரு சம்பவம் கூட என் மனதில் கவிதை தோன்ற காரணமாக இருந்தது.
பத்திரிகையில் படித்த எங்கள் நாட்டின் போர் கால நிகழ்வுகளை வைத்து சிறுகதை ஒன்றை எழுதினேன். அத்தனை முதிர்ச்சி இல்லாத எழுத்துநடை. பதினைந்து வயதில் என்ன பெரிய முதிர்ச்சி இருந்து விடப் போகிறது?
(அந்த சிறுகதையை கூடிய விரைவில் தளத்தில் பதிவிடுவேன்)
அதன் பிறகு கதை, சிறுகதை எழுத நினைக்கவே இல்லை.
(நான்கு வருடங்களுக்கு முன்பு "நினைவே நீயே" நான்கு அத்தியாயம் எழுதி விட்டு நிறுத்தி விட்டேன். Wattpad ல் பதிவிட்டேன் அங்கு படித்த சிலரும் எந்தப் பதிலும் கூறாமல் இருக்க நமக்கு கதை எழுதுவது பொருத்தம் இல்லையோ, எழுதத் தெரியவில்லையோ என்ற எண்ணம் வந்தது)
கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன்.
தவறுதலாக வேறு குழுவில் பதிவிடும் கவிதையை நறுமுகை தளத்திற்குரிய முகநூல் குழுவில் பதிவிட்டு விட்டு, அடுத்த நாள் காலையில் மன்னிப்பு கேட்க ஜனனி நவீன் அக்காவை தொடர்பு கொண்டேன். அவர்கள் தான் தளத்தில் எழுத சொன்னார்கள். ப்ரஷா குமார் அடுத்த நாளே திரி அமைத்துக் கொடுக்க இனிதே ஆரம்பம் என் எழுத்துப் பயணம். கவிதைகளைப் படித்து விட்டு ஜனனி நவீன் அக்கா தான் சிறுகதை எழுத முயற்சி செய் என்று திரி தூண்டிவிட்டார். சரி முயன்று பார்க்கலாம் என்று எழுதியது தான் "காதலின் இன்மை உணர்கிறேன்"
அதை எழுதிக் கொண்டிருந்த பொழுது தான் 'வைகை' தளத்தில் சிறுகதைப் போட்டி அறிவிப்பு வந்தது. எழுத்தாளர் கிருஷ்ண தாணு ரதி தம்பி தான் அதற்கு எழுதச் சொல்லித் தூண்டியது. மூன்று சிறுகதைகள் எழுதினேன்.
அடுத்து நேரடிப் புத்தகம். நான் எதிர்பார்க்கவே இல்லாத வாய்ப்பு அது. என்னை நம்பி வாய்ப்புக் கொடுத்த ப்ரஷாவுக்கும் புத்தகத்தை வாங்கும் வாசகர்களுக்கும் நியாயம் செய்து இருக்குறேன் என்று நம்புகிறேன்.
...
அருமையான அனுபவம்
******
நீங்கள் எழுத்துலகை தேர்ந்தெடுத்ததற்கான காரணம்:
சிறு வயது முதலே ஒட்டி இருந்த வாசிப்புப் பழக்கம் தான் என்னை வழி நடத்தி வந்தது.
வாசிப்பில் ஆர்வம் இல்லாது இருந்தால் மேற்குறிப்பிட்ட முகநூல் குழுவில் இணைந்திருக்கவே மாட்டேனே?
அதனால் கிடைத்த வாய்ப்புத் தான் இவ்வளவும்.
*****
எழுத்துலகிற்கு வந்த பிறகு நீங்கள் கற்றுக் கொண்டவையும், விட்டு விலகியதும் எவையெல்லாம் :
கற்றுக் கொண்டது நிறைய இருக்கின்றன. ஒரு கதை எழுதும் போது சில சந்தேகங்கள் வரும் அதற்கான விடை தேடும் பொழுது இன்னும் சில விடயங்கள் கிடைக்கும். அது போக நிறைய கற்றுக் கொண்டேன்.
விட்டு விழகியது என்று ஒன்றும் இல்லை. நான் நானாகத் தான் இருக்கிறேன்.
*****
நீங்கள் நாவல் எழுதும் முன்பு செய்வது என்ன :
வாசிப்பு தான் என் பொழுதுபோக்கு கதைகள் மட்டுமல்ல முகநூலில் வரும் பயனுள்ள தகவல்கள் அனைத்தும் படிப்பேன். அதற்கெனவே சில முகநூல் பக்கங்களிலும் குழுக்களிலும் இணைந்திருந்தேன்.
அத்தோடு கவிதை எழுதுவது. படங்கள் வைத்து அதற்கான கவிதை எழுதுவேன். அது மிகவும் பிடிக்கும் எனக்கு. ஒரு முகநூல் குழுவில் சவாலாக எனக்கு கவிதைகள் எழுதக் கூறி படங்கள் அனுப்பி வைத்தனர்.
கவிதை எழுதிய அனுபவம் இருப்பதாக சொல்லியிருக்கீங்க. கவிதை எழுத என்ன தெரிய வேண்டும்:
நிச்சயம் கவிதை தெரிய வேண்டும் (முறைக்காதீங்கப்பா😁😁)
காதல், நட்பு, ரசனை, நினைவுகள், இயற்கை, செயற்கை சார்ந்த எல்லாவற்றையும் ரசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். (அத்தோடு கொஞ்சம் வலியும் வேண்டும்)
...
அருமையான பதில்
*****
ஒரு சிலரின் கவிதை வாசிக்கும் போது அதனூடே கலந்து விடுவது போல இருக்கும். சிலது அப்படி தோன்றாமல் இருக்கும் அதற்கு காரணம் என்ன:
பெரும்பாலும் எழுத்து நடை தான் காரணம். (இது என் சொந்த அனுபவம்)
...
நிஜம் தான்.
*****
நீங்கள் எழுதும் சிறுகதைக்கு கரு எப்படிப்பட்டது தேர்வு செய்கிறீர்கள். அதற்கான வார்த்தைகள் எத்தனைக்குள் அடங்கி காணப்படும் :
இதுவரை எழுதிய அத்தனையும் மனதில் தோன்றிய ஒரு சிறிய சம்பவத்தை வைத்துத் தான் எழுதியுள்ளேன்.
வார்த்தைகளின் எண்ணிக்கை ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை.
நிஜ சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதினாலும், அதில் எழுத்தாளனின் கற்பனைகள் அதிக அளவில் கலந்து காணப்படும் பல எழுத்துகளில்… உங்களது எழுத்து எப்படிப்பட்டதாக இருக்கும்:
நிச்சயம் என் கற்பனைகளின் எழுத்துருவே என் அனைத்துப் படைப்புகளும். முழுமையாக நிஜ சம்பவங்களை மட்டுமே வைத்து நான் கதை எழுதவில்லை. ஆனால் சில நிஜ சம்பவங்களை கதைகளில் இடையே சேர்த்துள்ளேன்.
...
நானும் அப்படி தான்🙂🙂🙂
*****
காதல், நட்பு தொடர்பான படைப்புகளை மட்டும் இதுவரையில் எழுதி இருப்பதாக சொல்லியிருக்கீங்க. காதலுக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசம் என்ன :
உணர்வுகளுக்கும் உயிர்ப்பிற்கும் உள்ள வித்தியாசம் தான்.
காதல் நம் உணர்வுகளை மீட்டிச் செல்லும், நட்பு நமக்கு உயிர்ப்பைத் தரும்.
(விட்டா ஒரு பக்கத்துக்கு கட்டுரை எழுதிடுவேன் அக்கா இதைப்பற்றி)
...
பராவாயில்லை. பிறகு இதைப்பற்றி ஒரு தலைப்பு தருகிறேன். முயற்சி செய்து பார்த்து பலன் பெறுங்கள்.
*****
நேரடியாக புத்தகம் வெளி வந்திருப்பதாக சொல்லியிருக்கீங்க. அது எழுதும் முன், பின் நீங்கள் செய்வதென்ன :
மேலே சொன்னது தான். வாசிப்பேன், எழுதுவேன். அதோடு சேர்த்து எழுத்தாளர், வாசகர் நண்பர்கள் பட்டாளம் ஒன்று இருக்கிறது அவர்களோடு நேரம் கழிப்பேன்.
******
ஆன்லைனில் தொடராக எழுதுவதற்கும், முழுவதையும் எழுதி நாவலாக வெளியிடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன :
வாசகர் கருத்துக்கள் தான்.
தளத்தின் பதிவிட்டால் உடனே அதற்கான கருத்துக்கள் அறியக் கிடைக்கும். ஆனால் நேரடிப் புத்தகமாக வெளியிட்டால் வாசகர்கள் படித்துவிட்டு நாம் கொடுக்கும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு கருத்துக்கள் பகிர வேண்டும். சிலருக்கு அந்த மின்னஞ்சல் வசதி இல்லாமல் கூட இருக்கலாம்.
*****
போட்டிக்காக சிறுகதை எழுதி இருப்பதாக சொல்லியிருக்கீங்க. அதற்கான கரு எப்படிப்பட்டது தேர்வு செய்ய வேண்டும். ஒரு சிறுகதை வாசிப்பவரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா :
கதைக்கு கரு நான் மேலே குறிப்பிட்டது தான். மனதில் அந்த நேரம் தோன்றியதை வைத்து எழுதினேன்.
அடுத்து நிச்சயம் மனதில் தாக்கம் செலுத்தும். அதற்கு
உதாரணம் நான் மூன்றாவதாக எழுதிய சிறுகதையைப் படித்து விட்டு உடனே ஸீனத் ஸபீஹா சகி கொடுத்த விமர்சனம். அத்தோடு என் நண்பர்களின் தனிப்பட்ட விமர்சனங்கள்.
நான்காவது சிறுகதையைப் படித்துவிட்டு வாசகர்கள் கூறிய கருத்துக்கள் (சிறுகதையே பொங்கல் வாங்கிச்சி அக்கா😂😂)
மற்றும் ஸாஹிறா ஸப்றாஸின் விமர்சனம்.
...
கொடுத்து வச்சவ அனுபவிக்கிற😂😂😂
*****
இலங்கையில் எந்த இடத்தில் இருக்கிறீங்க? உங்கள் சுற்றுவட்டார பகுதி மற்றும் பாஷைகள் கதையில் வருவது போல எழுதிய அனுபவம் இருக்கிறதா :
கண்டியை அண்மித்த மாவனல்லை எனும் ஊரில் தான் தற்போது வசிக்கிறேன்.
சுற்றுவட்டார மொழிகளில் எழுதிய அனுபவம் இல்லை.
(இதுவரை எழுதிய என் கதைகளில் ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை)
*****
உங்கள் நாட்டில் உள்ள முக்கியமான இடங்கள், பேசும் பாஷைகள், கொண்டாடப்படும் விழாக்கள் பற்றி சொல்ல முடியுமா.
இலங்கை ஒரு சுற்றுலாத் தலம் தான். நிறைய அழகான இடங்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் இருக்கின்றன.
பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்ற நான்கு மதத்தினரும் வாழ்வதால் நான்கு மாதங்கள் சார்ந்த விழாக்களும் பண்டிகைகளும் கொண்டாடப்படும்.
சிங்களம், தமிழ், ஆங்கிலம் மற்றும் மலே (குறிப்பிட்ட மலே இனத்தவர் மட்டும் பேசுவார்கள்) மொழிகள் வழக்கில் உள்ளன.
*****
உங்களுடைய முஸ்லீம் மதம் பற்றி அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். உங்களால் முடிந்த பதிலை மட்டும் கூறுங்கள்:
ஓர் இறைக் கொள்கை கொண்ட மதம். அல்லாஹ்வை இறைவனாக வணங்குவோம். முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை இறைவனின் கடைசித் தூதராக நம்புவதும் முன்னர் அனுப்பப்பட்ட இறைத் தூதர்களை நம்புவதும் கடமை.
வேத நூல் குர்ஆன்.
தினமும் ஐந்து வேளை கட்டாயம் இறைவனைத் தொழ வேண்டும்.
ரமலான் மாதத்தில் நோன்பு இருக்க வேண்டும்.
(பெண்களுக்கு தொழுகை, நோன்பு விடயத்தில் சலுகைகள் உள்ளன)
நாம் சேமித்து வைத்திருப்பதில் (ஒரு அளவுக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில்) ஸகாத் எனும் கட்டாய தானம் கொடுக்க வேண்டும்.
வசதி உள்ளவர்கள் ஹஜ் யாத்திரை (மக்கா-சவுதி அரேபியா) செல்ல வேண்டும்.
இவை எல்லாம் கட்டாயமாக செய்ய வேண்டுபவை. அது இல்லாமல் நம் விருப்பம் போல கூடுதலாக தொழுகை, நோன்பு, தான தர்மங்கள் செய்யலாம்.
ஒருவரைப் பார்த்து முகம் மலர புன்னகைப்பதும், பாதையில் இருக்கும் தொந்தரவு தரும் சிறு கல்லை அகற்றி விடுவதும், தர்மம் என்பது எங்கள் நபிகளாரின் போதனை.
(இன்னும் நிறைய இருக்கின்றன ஆனால் இது போதும். ஒன்றே ஒன்று, எந்த ஒரு மதத்தையும் அதைப் பின்பற்றுபவர்களை வைத்து மதிப்பிடாமல் அந்த மதத்தை வைத்தே மதிப்பிட வேண்டும் என்று கூறுவேன் 🙂🙂)
...
சபாஷ்👌👌👌 பிரமாதமான பதில். உங்களது மதத்தை பற்றி தெரிந்து கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி🙂🙂🙂.
*****
நீங்கள் முஸ்லீம் என்பதால் தாங்கள் எழுதும் கதைகள் எல்லாம் முஸ்லீம் மதத்தை சார்ந்ததாக இருக்குமா அல்லது பலதும் கலந்து எழுத ஆசைப்படுபவரா :
நிச்சயமாக இல்லை. எங்கள் மதத்தை சார்ந்த கதைகளை நான் எழுதியதே இல்லை. கதையின் இயல்பே மாறிவிடும் அல்லது மதம் சார்ந்த விடயங்களில் தவறு செய்து விடுவேன் என்ற பயமும் தயக்கமும் இருக்கிறது.
உங்களுக்கு படைப்புகளுக்கு கிடைத்த வெகுமதியாக நீங்கள் நினைப்பது :
தளத்தில் எழுத வாய்ப்புக் கிடைத்தது தான் முதல் வெகுமதி. அத்துடன் வாசகர்களின் கருத்துக்கள், விமர்சனங்கள். என் கவிதைகளுக்காகவே என்னைத் தொடர்பு கொண்டு பேசி இன்று வரை என்னுடன் இருக்கும் நட்புகள்.
மற்றும் எங்கள் தளத்தில் என் கதை, கவிதைகளைப் படித்துவிட்டு அண்மைக்கால தோழிகள் தரும் கருத்துக்கள்.
*****
முகநூலில் உங்களுக்கு கிடைத்த நட்புகள் :
நிறைய பேர் இருக்கிறார்கள்.
*****
உங்களுடைய பொழுது போக்கு :
வாசிப்பு, எழுத்து
உங்களுக்கு பிடித்த ஆன்லைன் எழுத்தாளர்:
நிறையப் பேர் இருக்கிறார்கள்.
குறிப்பிட்டு இவர்களின் கதை தான் படிப்பேன் என்றில்லை. அனைவரின் கதைகளும் படித்திருக்கிறேன்.
சிலரின் எழுத்துநடை மற்றும் கதைத் தேர்வு மிகவும் பிடிக்கும்.
(குறிப்பிட்டு பெயர்கள் சொல்லி சில்வண்டு சிக்காது😁😁)
...
🙂🙂நானும் இனிமேல் கடைபிடிக்க முயற்சி செய்கிறேன்😂😂😂
******
நீங்க வியந்து நோக்கும் எழுத்தாளர் யாராவது இருக்கிறார்களா :
இருக்கிறார்கள். அதுவும் சிலர் அவர்கள் எழுதிய முதல் கதை என்று கூறி நான் படித்த கதைகள் சில உண்மையிலேயே வியக்க வைத்தன.
*****
ஒரு நாவல் எழுதும் முன்பு இத்தனை அத்தியாயம், வார்த்தை, கவிதை, வருணனை வர வேண்டும் என்று முடிவு செய்து பின்னர் எழுதுபவரா நீங்கள் :
இல்லை.
*****
உங்களது கதைக்கு நீங்கள் பெயர் தேர்வு செய்வது எப்படி :
கதையின் கருவை வைத்தே பெயர் தேர்வு செய்வேன்.
*****
உங்களது கதையின் நாயகர், இடை, கடை பாத்திரங்கள் உங்களது சுற்றுப்புரம், வீட்டாரை போல காணப்படுமா:
அப்பிடி என்றில்லை ஆனால் எங்கோ நம்முடன் சேர்ந்து பயணிக்கக் கூடியவர்கள், நம்முடன் பழகக் கூடியவர்கள் என்ற கற்பனையில் தான் எழுதுவேன். பிரம்மாண்டமான, பிரம்மிப்பானவர்கள் என்ற வர்ணனை இல்லை.
நீங்கள் எழுதிய படைப்புகளில் உங்களது திறமையை வெளிப்படுத்திய நாவல் எது :
தெரியாதே!! எழுதியவை மூன்றே மூன்று. வாசகர்கள் தான் பிற்காலத்தில் இதற்கான பதிலைக் கூற வேண்டும்.
உங்களுடைய போட்டிக்கதை பற்றி சொல்லுங்க:
மூன்று நாட்களில் மூன்று சிறுகதைகள் எழுதினேன்.
முதலில் எழுதிய சிறுகதை இறுதிச்சுற்றுக்கு தேர்வாகிய முப்பது சிறுகதைகளில் இடம்பெற்றதே எனக்கு மகிழ்ச்சி தான். வெற்றியடைந்தளவு மகிழ்ச்சியாக இருந்தது.
உங்களது கனவு லட்சியம் ஏதாவது இருந்தால் சொல்ல முடியுமா:
என் எழுத்துக்கு நூலுரு கொடுத்துவிட வேண்டும் என்ற ஆசை இருந்தது, நிறைவேறி விட்டது. எல்லாப் புகழும் இறைவனுக்கே.
என் குட்டிக் குட்டி கவிதைகளைத் தொகுத்து ஒரு புத்தகம் வெளியிட வேண்டும் என்ற ஆவல் கவிதை எழுத ஆரம்பித்ததில் இருந்து மனதில் இருக்கிறது.
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா :
நமக்கு திறமையும், முயற்சியும், இறைவனின் நாட்டமும், நமது வெற்றியில் மகிழ்ச்சியடையும் நல்ல உள்ளங்களின், தூண்டுதலும், வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும், சரியான களமும் இருந்தால் சாதித்துவிடலாம்.
உங்கள் படைப்புகளை வாசிப்பவர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது :
நேர்மறை எதிர்மறை விமர்சனங்கள் எதுவாக இருந்தாலும் நிச்சயம் என்னிடம் கூறுங்கள். உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் என் எழுத்துகளை மெருகேற்ற உதவியாக இருக்கும்.
------------------
முகநூல் நட்புக்களே இதோ உங்கள் கேள்விகளுக்கான பதில்கள்.
*தனிப்பட்ட முறையில் எனக்கு வந்த கேள்வி
எத்தனையோ ரீடர்ஸ் தனது ஃபேவரைட் ரைட்டர் கிட்ட பேச ஆசைப்படுவாங்க. அது மாதிரி நீங்கள் ரீடர்ஸ் கிட்ட பேச ஆசை படுறீங்களா?
தெரிந்த அளவில் அவர்களுடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன்டா. இன்னும் விரும்புபவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம். (Facebook messenger அவர்களுக்காக திறந்தே இருக்கும். வாசகர்களின் கருத்துக்கள் தான் என் பலம்)
இலங்கையில் இருக்கும் சிலரையாவது நேரில் சந்திக்கும் ஆசை இருக்கிறது.
*****
*வாணிலா அழகன்
நெகடிவ் கதை எழுத விரும்பியது உண்டா?
இல்லை அக்கா. ஆனால் நெகடிவ் கதாபாத்திரங்கள் என் கதைகளில் உண்டு.
*Archana Archu
எழுத ஊக்கு வித்த நபர் யாரு🙂?
கவிதைகள் தானாக எழுதியது தான்.
முடங்கிக் கிடந்த கதை எழுதும் ஆசையை தூண்டிவிட்டது ஜனனி நவீன் அக்கா தான்.
*****
எழுதற ஆசை எப்படி வந்தது😁?
வாசிப்பில் இருந்த ஆர்வம் தான் எழுதும் ஆசை வரக் காரணம்.
*****
எப்போதுல இருந்து எழுதுறீங்க😄?
பதினான்கு வயதில் இருந்தே ஆரம்பித்துவிட்டேன். ஆனால் சரியான களம் இப்போது தான் அமைந்தது.
*****
உங்க எழுத்தோட தனி சிறப்பா நீங்க நினைக்கறது என்ன😇?
நிச்சயமாக என் எழுத்துநடை தான். எழுத்துநடையை குறித்த நல்ல கருத்துக்கள் வருகின்றன.
*****
*Prema Kameswaran
முதல் எழுத்து ..... முதல் கருத்து.... எங்க எப்போ யார்…?
ஒரு படத்திற்கு சிறு கவிதை ஒன்றை எழுதி முகநூல் குழு ஒன்றில் பதிவிட்ட போது முதல் கருத்து சசிரேகா சகியிடம் இருந்து வந்தது.
கதைக்கான முதல் கருத்து - முதல் கதையின் முதல் அத்தியாயம் படித்து விட்டு Rishi Llb கொடுத்தது.
சிறுகதைக்கு ஸீனத் ஸபீஹா சகி கொடுத்தது.
*pavithra Karthikeyan
நீங்க எழுதணும்னு ( mind ல எப்பவும் தோனுமே ஒரு story)நினைச்ச story எது? எழுதிட்டீங்களா? இல்ல இனி தானா?
இப்படி ஒரு கதை எழுத வேண்டும் என்று ஒரு கதைக் கருவை நினைத்த அடுத்த இரண்டு நாட்களில் நேரடிப் புத்தகம் வெளியிட கதை கொடுக்குறீங்களா என்று ப்ரஷா குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாங்க. உடனே எழுதிட்டேன். இன்னும் ஒரு கதை இருக்கு அடுத்த கதை பெரும்பாலும் அதுவாகத்தான் இருக்கும்.
*****
*Zeenath Sabeeha
முதல் கதை எழுதி முடித்த பிறகு நீங்கள் உணர்ந்த உங்களின் உணர்வு என்ன?
ஏதோ பெரியதாக சாதித்த உணர்வு தான் சகி. என்னால் முடியும் என்பதை நானே உணர்ந்த தருணம் அது.
*****
நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என நினைத்தால் அது யாராக இருக்கும்?
முதலாவது எனக்கு இந்தத் திறமையைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி.
அடுத்து வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்த பெற்றோருக்கு நன்றி.
தளத்தில் எழுத வாய்ப்புக் கொடுத்து என்னை இன்று வரை ஊக்கப்படுத்தும் ஜனனி நவீன் அக்கா மற்றும் தோழி ப்ரஷா, எந்த நேரத்தில் என்ன சந்தேகம் கேட்டாலும் சொல்லிக் கொடுக்கும் தம்பி கிருஷ்ணா தாணு ரதி. சோர்வடைந்த தருணங்களில் தட்டிக் கொடுக்கும் சரண்யா மற்றும் ரிஷி அத்தோடு எங்கள் நறுமுகை குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி.
என் நட்பு வட்டத்தில் இருக்கும் அனைவருக்கும் என்னை ஊக்கப்படுத்தும் வாசகர்கள். என்னை வாழ்த்தி, பாராட்டி, எனக்காகப் பிரார்த்திக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
*****
உங்கள் கதைக்கு வந்த விமர்சனத்தில் உங்களால் மறக்க முடியாதது எது?
முதல் விமர்சனம் உங்களிடம் இருந்து தான் வந்தது சகி.
என் "யாழ் மீட்டும் தேவன் அவன்" சிறுகதையை நான் எழுதிய கோணத்தில் படித்து விமர்சனம் செய்தது மறக்க முடியாதது.
அடுத்து குறுநாவலுக்கு ரிஷி கொடுத்த விமர்சனம், Reni Angeline Raj அம்மா கொடுத்த விமர்சனம் அண்மையில் வனிதா கண்ணன் கொடுத்த விமர்சனம்.
என் கதைகளைப் படித்துவிட்டு ஒவ்வொருவரும் கூறும் கருத்துக்கள் எல்லாம் பொக்கிஷங்கள் தான் எனக்கு.
*Raiza Fathimaraiza
கல்வி கற்கும் போதே கவிதை கட்டுரை போட்டிகளில் கலந்துகொண்டிர்களா? பாடசாலை தான் அடித்தளமா?
இல்லை. போட்டி ஒன்றுக்கு "புகை, மது ஒழிப்பு" எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையை ஒதுக்கிவிட்டனர். அடுத்து வந்த மாணவர் மன்றம் நிகழ்ச்சியில் அதே கட்டுரையை மேடை ஏறிப் பேசினேன். புத்தகத்தில் மட்டும் இல்லாமல் என் எழுத்து மேடை ஏறிய திருப்தி எனக்கு. அத்தோடு பள்ளியில் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. சந்தர்ப்பம் அமையவில்லை (எங்கும் எதிலும் அரசியல் இருக்கு சகி)
*Saranya Visveshwaran
உங்க கவிதைகள் ரொம்ப பிடிக்கும்.
ரொம்ப நன்றி டா.
உங்க முதல் கதை எது?
காதலின் இன்மை உணர்கிறேன்.
கதை எழுதும் ஆர்வம் எப்படி வந்தது?
இப்போது தளத்தில் பதிவிடும் கதை நான்கு அத்தியாயம் எழுதிவிட்டு நிறுத்தினேன். கதை எழுத ஆர்வமே இல்லாமல் கவிதைகள் தான் எழுதிக் கொண்டிருந்தேன். கதை எழுத ஆர்வத்தைத் தூண்டியது ஜனனி நவீன் அக்கா தான்.
வீட்ல எந்த அளவுக்கு சப்போர்டா இருக்காங்க நீங்க எழுத 😍
நிறைய சப்போர்ட் இருக்கு.
அனைத்து வேலைகளையும் நேரத்திற்கு செய்து முடித்துவிட்டுத் தான் எழுத எடுப்பேன்
பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள் என்பதால் தொந்தரவு செய்யமாட்டார்கள்.
*****
பிடிச்ச எழுத்தாளர் யார்?
நிறையப் பேர் இருக்கிறார்கள். தோழி என்பதை கடந்து எழுத்தாளரா உங்களையும் பிடிக்கும் மச்சி. உங்களுடைய முதல் கதையே அழகா இருந்தது. இரண்டாவது கதை படிக்க ஆர்வமா இருக்கிறேன்.
*Swathi Krishna Novels
உங்களுக்கு புடிச்ச story type என்ன?
குடும்பம், காதல், நட்பு போன்ற கதைக் களம் பிடிக்கும்.
உணர்வு பூர்வமான கதைகளை விருப்பிப் படிப்பேன்.
Twist and Turns இருக்குற நமக்கு geuss பண்றதுக்கு ஏதாவது இருக்குற மாதிரி கதைகள் ரொம்ப ஆர்வமாப் படிப்பேன்.
ஒரு story எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?
ஆழ்ந்து அனுபவித்து ரசித்துப் படிக்க கூடியதா இருக்க வேண்டும்.
இப்போ நாம படிக்கும் story கும் real life கும் இருக்கும் வேறுபாடுகள் பற்றிய உங்கள் கண்ணோட்டம்.
நிஜ வாழ்க்கை என்பது தான் நிதர்சனம், உண்மை. (இறைவனின் நாட்டத்தின்படியே அனைத்தும் நடக்கும் என்ற நம்பிக்கை கொண்டவள் நான்)
ஆனால் நாம் படிக்கும் கதைகள், கதாசிரியர்களின் கற்பனைகள் வாழும் இடம். நிஜ சம்பவங்களைக்கூட தங்களின் கற்பனைகளையும் சேர்த்து மெருகேற்றித் தான் கதையாகப் படைப்பார்கள்.
எப்போ எப்படி writing ல interest வந்துச்சு?
மேலே சொல்லி இருக்கிறேன்டா.
Future plans writing ல என்ன?
சிறந்த களமாக இந்தத் தளம் கிடைத்திருக்கிறது. இயன்ற அளவு பயன்படுத்தி நிறைய நிறைய எழுத வேண்டும்.
Story writing காக எவ்ளோ நேரம் ஒதுக்குவீங்க?
வீட்டு வேலைகள் எல்லாம் முடிய இருக்கும் நேரம் எல்லாம் படிக்கவும், எழுதவும் தான்.
சில நாட்கள் நூறு வார்த்தைகள் கூட எழுத முடியாதளவு வேலை இருக்கும்.
Family support?
நிறையவே இருக்கு.
எழுதாதே என்று கூறாமலிருப்பதே பெரிய சப்போர்ட் தான் இல்லையா
உங்களோட first story பற்றி?
காதலும் இருக்கு ஆனால் காதலை விட நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதி இருந்தேன்.
Readers review பற்றிய கருத்துக்கள்?
வாசகர்களின் கருத்துக்கள் தான் என் பலம். நேர்மறை, எதிர்மறை என்று எந்தக் கருத்துக்களையும் ஆராய்ந்து பார்ப்பேன்.
****
Negative comments உங்க story கு வந்து இருக்கா? Yes means எப்படி அதை tackle பண்ணி வெளி வந்தீங்க?
இதுவரை என்னை கலங்க வைக்கும் அளவு எதிர்மறைப் கருத்துக்கள் வரவில்லை. அந்த அளவு நான் இன்னும் வளரவில்லை 😁😁
*****
*Sriraj S
கதை எழுதும் ஆர்வம் எப்போதிருந்து வந்தது?
என் கவிதைகளைப் படித்துவிட்டு ஜனனி அக்கா பலமுறை கூற தூங்கிக் கொண்டிருந்த ஆர்வத்தில் விழித்துக் கொண்டது.
நீங்கள் வாசித்த முதல் online கதை எது?
Wattpad, Any books என்று செயலிகளில் படித்துக் கொண்டிருந்தேன். மனதில் பதியும் படியான கதைகள் இல்லை அதனால் மறந்துவிட்டேன்.
கதைகளுக்கான தளங்கள் இருக்குறது என்று தெரிந்து முகநூல் குழுவில் இணைந்து தளத்தில் படித்த முதல் கதை
"மந்திரம் சொன்னேன் வந்துவிடு" தான்.
(promise. அதுக்கு பிறகு தான் வேறு தளங்கள் அதற்கான குழுக்களில் இணைந்தேன்)
உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார்?
திரும்பத் திரும்ப இந்த சில்வண்டை சிக்க வைக்கவே முயற்சி நடக்கிறது. நிறையப் பேர் இருக்காங்க. ஏ. ஜோதி யின் சிறுவர் கதைகளில் இருந்து ஆரம்பித்தது என் வாசிப்பு.
நீங்கள் எம்மாதிரியான கதை களத்தை அதிகம் விரும்புவீர்கள்?
உறவுகள் குறித்த உணர்வுபூர்வமான கதைகளை அதிகம் விரும்புவேன்.
(மேலே கூறியது தான்)
வாசகர்களின் விமர்சனம் என்று பெயரில் வரும் பொங்கல் பதிவுகள் பற்றி உங்கள் கருத்து.
கதைக்கும் கதை மாந்தர்களுக்கும் பொங்கல் வைக்கலாமே தவிர இங்கு சில பேர் செய்வதைப் போல எழுத்தாளரை குறி வைக்கக் கூடாது.
நேற்றும் ஒரு முகநூல் பதிவு எதிர்மறை கருத்துக்கள் அதிகம் மன உளைச்சல் தருகிறது என்று. அப்படி எல்லாம் வேண்டாமே. அவர்களின் கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளட்டும். ரசிப்பவர்கள் ரசிக்கட்டும், ரசிக்க முடியாதவர்கள் கடந்து போய்விடுங்கள்.
நம் ரசனையை கதாசிரியர்களின் கற்பனையில் திணிக்க நினைப்பது முறையல்லவே.
*Prasha Kumar
என்னை இப்போ உங்க கதை ஹீரோயின் ஆக்க போறீங்க 🙈🙈
நிஜ மாந்தர்களையோ அவர்களின் பெயர்களையோ வைத்து கதை எழுத ஆசை தான். ஆனால் பயமா இருக்கு.
*****
*Uma Uma
உங்களுக்கு ரொம்ப பிடிச்ச எழுத்தாளர் யார். எழுதணும் என்ற ஆர்வம் எப்படி உங்களுக்கு உள்ள தோன்றியது. அதே நேரம் நீங்க யாருக்கு thanks சொல்ல நினைக்கிறீங்க.
நீங்க கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் மேலே கூறிவிட்டேன்டா.
என்னை உங்கள் அறிமுகப்படலத்தில் சேர்த்துக் கொண்டமைக்கு ரொம்ப நன்றி ஆனந்த ஜோதி அக்கா.
நிறைய கேள்விகள் ஆனால் அனைத்தும் அழகான கேள்விகள்.
அத்தோடு என் முகநூல் நட்புகளின் கேள்விகள் அனைத்தும் ஆக்கப்பூர்வமான கேள்விகள். அனைத்துக் கேள்விகளுக்கும் ரசித்து ரசித்து பதில் கூறி இருக்கிறேன்.
நன்றிகள் பல அன்பு உறவுகள்!!
ஆனந்த ஜோதி அக்கா உங்கள் முயற்சி வெற்றி பெற, எதிர்கால திட்டங்கள் நிறைவு பெற என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
நன்றி.
*****
மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏
உங்களது பதில்கள் அனைத்தும் மிகவும் அருமையாகவும், எழிமையாகவும் இருந்தன. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கவும், உங்கள் எண்ணங்கள் யாவும் ஈடேறவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐
Thank you so much akka
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துகள்மா💐💐
Delete