#எழுத்தாளர்அறிமுகப்படலம்
சீசன் இரண்டு
ஹாய் பிரண்ட்ஸ்,
இன்றைய அறிமுக எழுத்தாளர் சரோஜினி, அவர்களைப் பற்றிய நேர்காணல் :
பெயர் : சரோஜினி
சொந்த ஊர் : இராமநாதபுரம்
படிப்பு : M.Sc., M.Phil(CS), M.Sc.(Yoga)
பணி : இண்ஸ்ட்ரக்டர்(CS), பகுதிநேர உதவி பேராசிரியர்(யோகா) (வெவ்வேறு இடங்கள்)
தளம் : smtamilnovel
*****
அமேசான் பெயர் & லிங்: சரோஜினி
*****
தற்சமயம் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் லிங்& முடிவுற்ற நாவலின் லிங் :
தற்சமயம் மது பிரியன் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
*****
முடிந்த நாவல்களின் லிங்க்
https://forum.smtamilnovels.com/index.php?categories/sarojini.705/
*****
புத்தகம் கிடைக்கும் இடம்& புத்தகத்தின் பெயர்:
MS Publication – நீயும் நானும் அன்பே, விரைவில்… ஆசை முகம்
*****
நீங்கள் எழுதிய முதல் நாவல்: நிலவைக் கொண்டு வா
*****
இரண்டரை வருட எழுத்து அனுபவத்தில் உங்களது சாதனை மற்றும் சோதனைகளை பற்றி சொல்ல முடியுமா :
சாதனை…
எழுத்து உலகில் சாதனைகளை இன்னும் எட்டவில்லை.
சோதனைகள்
சோதனைகள் இல்லாம எந்த துறையும் இருக்காது. அதுபோல இந்தத் துறையிலும் அவ்வப்போது எதிர்பாராமல் இடர்படக்கூடிய சோதனைகளைக் கடந்தே எழுதுகிறேன்.
எடுத்துக்காட்டாக, மூன்று மாதத்தில் ஒரு நாவலை முடித்துவிடலாம் என எண்ணித் துவங்கும்போது, வேறு ஏதேனும் பணிகள் குறுக்கிடும். அதற்காக எழுதுவதை நிறுத்தவும் முடியாது. குறுக்கிட்ட பணியை செய்யாமலும் இருக்க முடியாது.
*****
உங்களது குறிக்கோள் , எழுத்துலகில் நீங்கள் படைத்த சாதனை அதற்காக வாங்கிய விருதுகளை பற்றி சொல்ல முடியுமா:
குறிக்கோள்… தரமான கதைகள் மூலம் சமுதாயத்தில் விழிப்புணர்வை உண்டாக்குவது.
விருதுகள் என்று எதுவும் இதுவரை வாங்கவில்லை.
*******
உங்களது நட்பில் உள்ள எழுத்தாளர்களை பற்றி சொல்ல முடியுமா:
நட்பானவர்கள், ஓய்ந்துபோகும் போது தன்னம்பிக்கை வார்த்தை மூலம் விட்ட பணியைத் துவங்க உதவுகிறார்கள். குறிப்பிட்டு யாரையும் கூறினால் விடுபட்டவர்கள் தவறாக எண்ணக்கூடும்.
******
உங்களது படைப்புகள் காதல், குடும்பம், சமூகம், ஆன்மீகம், வரலாறு இதில் எதை சார்ந்ததாக இருக்கும்:
காதல், குடும்பம், சமூகம், ஆன்மீகம் இப்படிப்பட்ட படைப்புகள்தான் இதுவரை எழுதியிருக்கிறேன்.
******
ஒரு நாவல் எழுதும் முன்பும், பிறகும் என்ன தெரிந்திருக்க வேண்டும்:
அந்த நாவல் எழுதத் துவங்குவதற்கான காரணம். அதன்மூலம் சமூகத்திற்கு என்ன விசயத்தை கொண்டு சென்று சேர்க்க வேண்டும், என்கிற தெளிவு வேண்டும். அதன்பின் காட்சியமைப்புகளில் முரண்பாடு இல்லாமல் தெளிந்த நீரோடை போல கொண்டு செல்லத் தெரிந்திருக்க வேண்டும்.
******
உங்களைப் பற்றி சில வரிகளில் சொல்ல முடியுமா:
என்னைப் பற்றி… கடுமையான உழைப்பாளி. நேரத்தின் அருமை உணர்ந்து, தொய்வில்லாமல் எடுத்துக்கொண்ட வேலைகளை உரிய நேரத்திற்குள் முடிப்பது என்னோட பலம்.
*****
உங்களது விருப்பமான எழுத்தாளர்:
மனநிலையைப் பொருத்தும், நேரத்தைப் பொருத்தும் பல்வேறுபட்ட எழுத்தாளர்களின் எழுத்தை வாசிப்பேன். கையில் கிடைக்கும் துண்டு பேப்பரைக்கூட விடாமல் படிக்கும் பழக்கம் எனக்குண்டு.
…
அருமை
*****
உங்களது எழுத்து அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
இலகுவான பணியாக எண்ணித்தான் எழுத வந்தேன். எழுத வந்தபிறகுதான் எழுத்தாளர்களின் நிலையை உணர்ந்து கொள்ள முடிந்தது.
…
நிஜம் தான்
*****
உங்களது நாவல்கள் மற்றும் சிறுகதைகள் சிலவற்றின் பெயர்:
நிலவைக் கொண்டு வா (குறுநாவல்)
உலாவரும் கனாக்கள் கண்ணிலே
அவளுக்கென்ன (குறுநாவல்)
மகிழம்பூ மனம் (குறுநாவல்)
வானம் காணா வானவில்
சரியா யோசி
நீயும் நானும் அன்பே
இதய வேட்கை
ஃபீனிக்சாய் மனம் (குறுநாவல்)
வெல்லும் வரை ஓயாதே
ஆசை முகம்
எனை மீட்க வருவாயா
…
அழகான பெயர்கள்
*****
நீங்கள் ஒரு எழுத்தாளராக வருவேன் என்று எப்போதாவது நினைத்தது உண்டா:
நிச்சயமா இல்லை. ஆனா எழுதும் வேட்கை சிறு வயதிலேயே இருந்தது. “பூவுக்குள் பூகம்பம்” தொடர்கதை முகவை டைம்ஸ் எனும் மாவட்ட வார இதழில் 2007ல் எழுதினேன்.
கவிதைத் தொகுப்பு ஒன்றும் 2007 ல் வெளியிட்டுள்ளேன்.
…
வாழ்த்துகள் சிஸ்டர்
******
எழுத்து துறைக்கு வந்ததால் உங்கள் வீட்டாரின் சப்போர்ட் எப்படி இருக்கு :
எனது ஆன்ம திருப்திக்காக வீட்டாரின் துணை இல்லாத நிலையிலும் தொடர்ந்து எழுதுகிறேன்.
******
எழுத வரும் முன்பு நீங்கள் இருந்த மனநிலைக்கும், இப்போது உள்ள நிலைக்கும் உள்ள வித்தியாசமா எதையாவது சொல்ல நினைக்கறீங்களா :
என்னோட எட்டு வயது முதலே வாசிக்கும் பழக்கம் எனக்குள் வந்துவிட்டது. அப்போது முதலே தேடித் தேடி நூலகங்களில் நாளொன்றுக்கு நான்கு புத்தகங்கள் எடுத்து வந்து படிப்பேன். தற்போது அதுபோலப் படிக்க இயலவில்லை என்கிற வருத்தம் உள்ளது.
…
நிஜம் தான்
******
கவிதை எழுதிய அனுபவம் இருந்தால் சொல்ல முடியுமா:
எழுதியிருக்கிறேன். 2007ல் “கவிதைப் பூங்கா” எனும் தொகுப்பாக இராமநாதபுரம் தமிழ்சங்கம் மூலம் அதை வெளியிட்டுள்ளேன்.
*****
உங்களது படைப்புகளில் சொந்த வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்களை கதையாக எழுதிய அனுபவம் இருக்கிறதா :
இல்லை. கண்டது,கேட்டது, படித்தது, உணர்ந்தது, எதிர்பார்ப்பது இதைத்தான் எழுதி வருகிறேன்.
*****
காதல் கலந்த குடும்ப நாவல் உங்களுடைய விருப்பம் என்றீர்கள் ஒரு குடும்ப நாவல் என்றால் எப்படி இருக்க வேண்டும். அதில் காதலை ஆசிரியர் எங்கனம் புகுத்தி இருக்க வேண்டும்:
குடும்ப நாவல் என்பது விரசம் இல்லாமல், ஆர்வமிக்க எழுத்து நடையோடு, புதுமையான களமாக இருப்பது நலம். அந்நாவலின் மூலம், படிப்பவர்கள் தாங்கள் அறியாத விசயங்களை, சில வாழ்வியல் நுணுக்கங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இருக்க வேண்டும்.
குடும்ப நாவலில், காதல் என்பது சிறு அங்கம்தான். அதனால் காட்சிகளை மிகைப்படுத்திடாமல், மிதமான காதல் உணர்வுகளைக் கொண்ட கதைகளையே இதுவரை நான் எழுதியுள்ளேன்.
…
அருமையான பதில்.
******
ஒரு நாவல் வாசிப்பவர் மனதை சென்றடைய எழுத்தாளன் என்ன செய்ய வேண்டும் :
விறுவிறுப்பான காட்சியமைப்போடு கூடிய எழுத்துநடை அவசியம். வளவளவென்று இருக்கும் எழுத்துகளை மக்கள் பெரிதும் விரும்புவதில்லை.
…
நிஜம் தான். நானும் கூட…
******
திருமணமாகி கணவரின் வீட்டுக்கு சென்ற பிறகு ஒரு பெண் எத்தகைய வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீங்க:
சூழலுக்கு ஏற்ற மாதிரி தங்களை மாற்றிக் கொள்ளக்கூடிய இயல்பினர்கள்தான் பெண்கள்.
பொறுமை, தியாகம், சகிப்புத்தன்மை இருந்தால் பிரச்சனையின்றி, சுமுகமான வாழ்க்கையை வாழலாம்.
******
நீங்கள் எழுதிய கதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது? உங்களை கவர்ந்த கதாபாத்திரமாக எதை நினைக்கிறீர்கள்:
எல்லா கதைக்களத்தின் கதாபாத்திரங்களுமே மனதோடு உறவாடிய பாத்திரங்கள்தான். அதனால் பிடித்தது, பிடிக்காதது, கவர்ந்தது எனப் பிரித்திட இயலாது.
******
சஸ்பென்ஸ் கலந்த காதல் கதை எழுதியிருப்பதாக சொல்லும் நீங்கள், வாசகர்களின் ரசனைக்கு ஏற்ற நாவலாக கொடுத்திருக்கிறீர்களா :
வாசகர்களின் ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலர் ஆஹா எனப் போற்றுவர். அதையே சிலர் தூற்றுவர். எதையும் மிகைப்படுத்திடாமல், இயல்பான எழுத்து நடையில் நடைமுறையோடு இயைந்து உள்ள எழுத்தினை சிலர் ஆராதிப்பர். சிலருக்கு, அழுத்தம் குறைவாக இருப்பதாக எண்ணி, கடந்து விடுவர். ஆகையினால் தரமான எழுத்தினை எழுதுவது ஒவ்வொரு எழுத்தாளரின் கடமை. மேம்போக்காக கற்பனை வானில் வாழக்கூடிய காட்சியமைப்புகளை கொடுத்து, வாழ்க்கையைப் பற்றிய தவறான எதிர்பார்ப்பினை, புரிதலை வாசகர்களுக்குத் தருவதில் எனக்கு உடன்பாடில்லை.
…
உண்மை தான்.
******
உங்களது வாசிப்பு அனுபவம் பற்றி சொல்ல முடியுமா:
வாசிப்பு என் மூச்சு. தீராத தாகம் வாசிப்பில் இன்னும் உள்ளது. தரமான புத்தகங்களை தேடி வாசிப்பதில் உள்ள சுகமே அலாதிதான்.
******
வாசகர்களின் கருத்தைப் பார்த்து கதையோட்டத்தை அதன் முடிவை மாற்றிய அனுபவம் இருக்கிறதா:
அப்படி மாற்றினால் எழுத்தாளன் கூற எண்ணிய கருத்தைக் கூற இயலாது என்பதால், மாற்றியதில்லை.
******
ஒரு நாவலில் வரும் கற்பனைக்காட்சி எப்படி இருக்க வேண்டும் :
எந்த வகையான கதைகளைத் தருகிறோம் என்பதைப் பொறுத்து அது அமையும்.
*******
உங்கள் ஊர் மற்றும் சுற்றுவட்டாரங்களைப் பற்றிய தகவல்களை உங்களது படைப்புகளில் கொடுத்திருக்கிறீர்களா :
எனது முதல் கதையான நிலவைக் கொண்டு வா களத்தின் பெரும்பாலான காட்சியமைப்புகள் எங்கள் மாவட்டத்தில் உள்ளதுதான்.
******
1980 க்கு முன்பு உள்ள எழுத்தாளர்கள், தற்சமயம் உள்ள எழுத்தாளர்களில் உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்களின் பெயர்களை சொல்ல முடியுமா :
பிடிக்குது பிடிக்கலைங்கறது இல்லை. ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒரு பாணி இருக்கும். அதன்மூலம் அறியாத விசயங்களை அறிந்து கொள்கிறோம். தமிழை கையாளும் நேர்த்திக்காகவே நிறைய புத்தகங்களை தேடி வாசிக்கிறேன்.
சாண்டில்யன், கல்கி, விக்ரமன் அப்டினு துவங்கி, லஷ்மி, ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், வித்யா சுப்பிரமணியன், பாலகுமாரன், அனுராதா ரமணன், சிவசங்கரி, ஸ்டெல்லா புரூஸ், ஜோதிர்லதா கிரிஜா, மணிமாலா, ஆர்னிகா நாசர், வைரமுத்து, கண்ணதாசன், ரமணி சந்திரன், காஞ்சனா ஜெயதிலகர், கோபிநாத், ஹன்சிகா சுகா, பத்மா கிரகதுரை, சஷிமுரளி, மல்லிகா மணிவண்ணன், வாநிஷா, அழகி, (இன்னும் நிறைய விடுபட்டிருக்கு, தோழமைகள் மன்னிக்கவும்) இதுதவிர எஸ்எம் தளத்தின் பெரும்பாலான எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசித்திருப்பேன். மற்ற தளங்களில் எழுதும் பல எழுத்தாளர்களின் புத்தகங்களையும் நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன்.
சில மாதங்களாக ப்ரூஃப் ரீட் செய்வதால், எந்த தள எழுத்தாளர் என்பதே தெரியாமல், அவர்களின் எழுத்துகளை வாசிக்கும் வாய்ப்பும் சமீபமாக அமைந்துள்ளது.
******
ஒரு எழுத்தாளனுக்கு வாசகனின் ஊக்கு விப்பு, கருத்து பரிமாற்றம், விமர்சனம் எத்தகைய மாற்றத்தை விளைவிக்கிறது:
அடுத்தடுத்து தொடர்ச்சியான அத்தியாயங்களைத் தரவேண்டும் என்கிற உந்துதல் எழும். ஆகையினால் இடைநிறுத்தம் இன்றி எழுத முடிகிறது.
…
நிச்சயமாக
*****
பேச்சு வழக்கும், இலக்கணமும் கலந்து வரும் படைப்புகள் வாசிப்பவரிடம் தோற்றுவிப்பதென்ன:
எழுத்தாளரின் பார்வையில் எழுதக்கூடியவை இலக்கணத்தோடும், இருவரோ, அதற்கு மேற்பட்டவர்களோ பேசும் காட்சியமைப்புகளில் பேச்சு வழக்கோடும் இருத்தல் என்பது காட்சியமைப்போடு ஒன்றச் செய்வதாக இருக்கும். அனைத்தும் இலக்கணத்தோடு இருந்தால், காட்சியோடு ஒன்றுதல் சிரமமாக இருக்கும்.
*****
சஸ்பென்ஸ் திரில்லர் கதை எழுத என்ன தெரிந்திருக்க வேண்டும் :
முடிச்சுகளை, முரண்பாடு இல்லாமல் கொண்டு செல்லவும், அதனை விடுவிக்கும் முறைமையும் தெரிந்திருக்க வேண்டும்.
*****
காதல் காட்சிகளை வாசிப்பவர் முகம் சுளிக்காமல் கொடுப்பது பற்றி என்ன நினைக்கிறீங்க:
அது எழுத்தாளனோட கடமை.
*****
நீங்கள் நாவல் எழுதுவது என்பதை பகுதி நேர பணியாக செய்கிறீர்களா அல்லது முழு நேர வேலையாக வைத்திருக்கிறீர்களா :
பகுதி நேரப் பணி.
******
நீங்க you tube Channal and Audio ஏதாவது வச்சிருக்கங்களா:
இல்லைமா.
******
தனிப்பட்ட முறையில் ஏதாவது சொல்ல விருப்பப்படுகிறீர்களா :
இல்லை.
******
உங்களது ரசனைக்கு ஏற்ற நாவல்:
சண்டை, சச்சரவு இல்லாமல் ஸ்மூத்தாக நகைச்சுவைக் காட்சியமைப்புகளோடு இருக்கக்கூடிய நாவலை சமீபமாகத் தேடிப் படிக்கிறேன்.
ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான ரசனைகளைக் கடந்து வந்திருக்கிறேன்.
*****
மிக்க நன்றி சிஸ்டர்🙏
உங்களது கேள்வி பதில்கள் அனைத்தும் அருமையாக இருந்தன. மேலும் பல அட்டகாசமான படைப்புகளை வழங்கிட, மனமார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐
நன்றி நட்புக்களே
.
சூப்பர் ma
ReplyDelete