நட்புகள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தினநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு இன்றைய தினம் என்னுடைய 15 - வது படைப்பிற்கான டீஸரை வழங்குகிறேன்.
நாயகன் :
விக்ரம் ; விக்னேஷ்
நாயகி :
நந்தினி
அதிகாலையில் எழுந்த நந்தினி தன்னுடைய வழக்கமான காலைக் கடன்களை முடித்த பின்னர், பூஜையறைக்குள் புகுந்து இறைவழிபாட்டை முடித்தாள். சுவரில் இருந்த பெற்றோரின் புகைப்படத்தின் முன்பு கண்மூடி தியானித்தவளின் விழியோரம் கசிந்தது. 'என்னை விட்டுச் செல்ல உங்கள் இருவருக்கும் எப்படி மனசு வந்தது? அந்த அளவிற்கு நான் செய்த பாவமெனன? தாத்தா ஒருவரின் ஆதரவில் தானே இத்தனை நாட்களாக உயிர் வாழ்ந்து வருகிறேன். அவருக்கு பிறகு என்னுடைய நிலைமை என்னாவது?' என்று கலங்கினாள்.
அவளது தாத்தா அருணாச்சல கவுண்டர், பேத்தியின் முகத்தைப் பார்த்ததும் அவள் மனதைப் புரிந்து கொண்டு அமைதியாக நின்றார். அவளது சோகத்திற்கான காரணம் புரிந்தது. அவளை கடைசி வரைக்கும் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை, யாரிடம் ஒப்படைப்பது என்று எண்ணியவரின் விழிகளில் விக்னேஷ் வந்தான்.
விக்னேஷ் நந்தினியின் ஒன்று விட்ட அத்தையின் மகன். சிறு வயதில் இருந்தே அவள் மீது உண்மையான பாசத்தைக் கொட்டி, அவள் பார்வைக்காக ஏங்கி பின்னே அலைபவன்...
அன்றிலிருந்து சரியாக இரண்டாவது நாள், தன் குடும்பத்தார் சுற்றம் சூழ வருகை தந்தான் விக்னேஷ். அவனது புன்னகையுடன் கூடிய முகம் பார்ப்பதற்கு மேலும் அழகாக தெரிந்தது. அவனது வரவில் நிம்மதி பரவசத்துடன் காணப்பட்ட அருணாச்சல கவுண்டர், அனைவரையும் கூடத்தில் கிடந்த சோஃபாவில் அமர வைத்தார்.
புன்னகையுடன் பேத்தியை காண அவளது அறையை நோக்கி நடந்தார்.
கலக்கம் சுமந்த விழிகளுடன் நின்ற பேத்திக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி தேற்றியவர், "எனக்கும் பிறகு உன்னைப் பார்த்துக்க நம்பிக்கையானவன் விக்னேஷ் ஒருவன்தான். அவன் உன்மேல உண்மையான அன்பையும், நேசத்தையும் வச்சுருக்கான். உனக்கும் கல்யாண வயசு வந்திட்டது. எனக்கு ஏதாவது ஆவதுக்கு முன்னாடி உன்னை உரியவனிடத்தில் ஒப்படைத்து, நானும் நிம்மதியா போய் சேருவேன் இல்லையா?" என்று சென்டிமென்ட் வசனத்தால் அவளது வாயடைக்க செய்தார்.
***
ஒரு வழக்கு விசயமாக மும்பைக்கு சென்றிருந்த விக்ரம், சீனியர் அட்வகேட் அழைப்பின் பெயரில் அவரைப் பார்க்க ஹோட்டலுக்குச் சென்றான்.
உதட்டில் நீண்டு நின்ற ஃபாரின் சிகரெட் அவ்வப்போது புகையை கக்கியது. விரல் நுனிகள் சொடுக்கிட்டபடி தனக்குப் பிடித்த பாடலை முணுமுணுத்துக்கொண்டே, பாதி சிகரெட்டை கீழே போட்டு நசுக்கினான். அவர் குறிப்பிட்ட இருக்கையில் சென்று அமர்ந்து அவரது வருகையை எதிர்நோக்கினான்.
சற்று நேரத்தில் அவர் வந்தார்.
"வெல்கம் மிஸ்டர். விக்ரம்!" என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தான்.
"குட் மார்னிங் சார்" மரியாதை நிமித்தம் கை நீட்டி குலுக்கினான்.
"வெரி குட்மார்னிங்" என்றவர், அவனுக்கு எதிர் பக்க நாற்காலியில் அமர்ந்தார். சற்றுநேரம் இருவரும் தொழில் விசயமாக பேசினார்கள். பின்னர்,
"வரச்சொன்னீர்களே சார். ஏதாவது முக்கியமான விசயமா?"
"எஸ் மிஸ்டர் விக்ரம்"
"என்ன சார் இது? மிஸ்டர், மிஸ்டர்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லிட்டு. சும்மா 'விக்ரம்'னு ஒருமையில் கூப்பிடுங்க" என்று புன்னகைத்தான்.
"ஸ்யூர். விக்ரம் எனக்கு ஒரு முக்கியமான வேலை செஞ்சு கொடுக்கணுமே..."
"உங்களுக்கு இல்லாததா? கண்டிப்பா செஞ்சிடலாம். மர்டரா, இல்லை சூசைடா?"
"நோ, நோ! நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. இது வேறு ஒரு விஷயம். அதை தெரியாத யாரோ ஒருவரை வச்சு செய்வதை விட கிரிமினல் லாயராக, எதுக்கும் யாருக்கும் அஞ்சாத சிங்கம் போல் திகழும் நீங்கதான் ரொம்ப பொறுத்தமா இருப்பதா தோணியது. அதான் வரச் சொன்னேன்"
பீடிகையுடன் உரைத்தவரை பார்த்தவனின் உதடுகள் புன்சிரிப்பை உதிர்த்தாலும், லாயர் மூளை 'எதற்காக வரச் சொன்னார்? என்ன விசயமாக இருக்கும்?' என்று சிந்திக்கவும் தயங்க வில்லை
"விக்ரம், ஒரு பெண்ணை உங்க வசப்படுத்தி நீங்க சொல்ற மாதிரி நடக்க வைக்கணும். அவள் சம்மதத்தோட நான் சொல்லும் இடத்துக்கு அழைச்சுட்டு வரணும். அவள் மூலம் எனக்கு ஒரு முக்கியமான வேலை ஆகணும்" என்று மர்மமாக உரைத்தார்.
சரியான காரணம் இல்லாமல் செய்பவன் அவன் கிடையாது என்று ஏற்கனவே அவனைப் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருந்தவர், "இந்த விசயத்தை நல்ல விதமா முடிச்சு தந்தா இருபது லட்சம் உங்களுக்கு தருவேன். ஆனால், நான் சொன்ன மாதிரி கடைசி வரைக்கும் நடக்கணும்" என்று உத்தரவு போல கூறினார்.
விசயம் என்னவென்று தெரியாமல் பணத்தை பற்றி அவன் எண்ணவில்லை. அதேநேரம் கேள்வியாக உயர்ந்த புருவம் அவரது வாய் மூலம் அனைத்தையும் வெளியே வரச் செய்தது.
விசயத்தை தெரிந்து கொண்டவன் விழிகள் ஆச்சர்யமாக நோக்கினாலும் உதடுகள் அழுத்தமாக இருந்தது.
" இதுக்கு நீங்க நிர்ணயித்த தொகை ரொம்பவும் குறைவு. இதை நான் செய்யணும்னா பிப்டி பிப்டி வேணும். இல்லை, என் வேலையை பார்த்துட்டு நான் போயிட்டே இருப்பேன்" என்று உரைத்து எழுந்தான்.
"வெயிட் விக்ரம்! எதுக்கிந்த அவசரம்? நீங்க கேட்டு நான் தர மாட்டேன்னு சொல்லுவேனா? என்று கூறியவர், விக்ரம், இது ரொம்ப முக்கியமான விஷயம். வேறு யாருக்கும் தெரியக் கூடாது. அப்புறம் அவளோட தாத்தாவை அவ்வளவு சீக்கிரம் ஏமாத்த முடியாது. அவரையும் அவள் மேல உண்மையாக பாசத்தை கொட்டி திருமண நாளை எதிர்நோக்கி காத்திருக்கும் விக்னேஷையும் சாதாரணமா எடை போட கூடாது. காரியம் முடியும் வரை நாம சந்திக்க வேண்டாம். ஏதாவது முக்கியமான விஷயமிருந்தா என்னோட பர்சனல் மொபைலுக்கு செய்தி அனுப்பிடுங்க... அது போல் நீங்க யாருங்ற விசயம் அங்கு யாருக்கும் தெரியக் கூடாது. இதோ அட்வான்ஸ் பத்து லட்சம் மீதம் உங்க வேலை முடிஞ்சதும் தரேன்" என்று பிரீஃப்கேஷை நீட்டியவரின் கரத்தில் இருந்த புகைப்படம் அவனது விழிகளை விரியச் செய்தன.
அப்படி அவர் விக்ரமிடம் கூறிய விசயமென்ன? யாரை தன் வசப்படுத்த புறப்படுகிறான் விக்ரம்? விக்னேஷ் -> விக்ரம் இருவரில் அவள் மனதை கொள்ளையடிக்க போவது யார்? சீனியர் அட்வகேட்டின் எண்ணங்கள் ஈடேறுமா? என்பதை ஜனவரி 1 முதல் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி நான் ...
தொடர்கதைக்கான அத்தியாயங்களை தொடர்ந்து வாசிக்க Jothi novel-ல் இணைந்திருங்கள்.
Comments
Post a Comment